இன்னும் எத்தனைப் பெயர்தான் சூட்டுவீர்கள்….
-மயூரா அகிலன்
-செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 12, 2011, 9:37(IST) http://thatstamil.oneindia.in பிறந்த உடனே
பொட்டச்சி என்கிறீர்கள்…
குமரியாய் நின்றவுடன்
கழுதை என்கிறீர்கள்...
திருமண சந்தையில்
விலைபோக நாளானால்
முதிர்கன்னி என்கிறீர்கள்…
மணமுடித்து
மழலைக்கு தாமதமானால்
மலடி என்கிறீர்கள்…
விவாகம் ரத்தானால்
வாழாவெட்டி என்கிறீர்கள்…
மணாளன் மாண்டால்
விதவை என்கிறீர்கள்…
தள்ளாத வயதில்
தடுமாறி நிற்கையில்
கிழவி என்கிறீர்கள்….
பெண்மையை போற்றுவதும்
ஆராதிப்பதும்
கதைகளில் மட்டும்தானா ?
நாங்கள் பட்டம் பல பெற்றாலும்
சமூகம் சூட்டும்
பட்டப்பெயர்கள் மட்டும்
என்றும் மாறுவதே இல்லை...
நிஜத்தில் இன்னும்
எத்தனைப் பெயர்தான் சூட்டுவீர்கள்….